Feb 3, 2012

பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்

                                                அஸ்ஸலாமு அலைக்கும்

பிறப்பு

அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ‘அனூ ஷேர்வான்’ என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு. இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

(நபி (ஸல்) அவர்கள் பிறந்தபோது அவர்களது நுபுவ்வத்துக்கு முன்னோடியாக ஆமினாவின் உடலிலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது அதன் பிரகாசத்தில் ஷாமின் கோட்டைகள் ஒளிர்ந்தன நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட நிலையிலேயே பிறந்தார்கள்; கிஸ்ரா உடைய மாளிகையில் பதிநான்கு மாடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன பல்லாண்டு காலமாக மஜூஸிகள் வணங்கி வந்த பிரம்மாண்டமான நெருப்புக் குண்டம் அணைந்துவிட்டது ‘ஸாவா’ என்ற நீர் தடாகத்தைச் சுற்றியுள்ள கிருஸ்துவ ஆலயங்கள் இடிந்து வீழ்ந்தன என்று கூறப்படும் இத்தகைய கூற்றுகளுக்கு உறுதியான சான்றுகள் ஏதும் இல்லை. அந்த சமுதாயத்தவரும் தங்களது வரலாற்று நிகழ்வுகளில் இதைப்பற்றி குறிப்பிடவில்லை.)

குழந்தையைப் பெற்றெடுத்ததும் ஆமினா அந்த நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியுடன் தனது பேரரை கஅபாவுக்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவருக்காக பிரார்த்தித்தார். மேலும் அக்குழந்தைக்கு “முஹம்மது” எனப் பெயரிட்டார். இப்பெயர் எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை. அரபியர்களின் வழக்கப்படி ஏழாம் நாள் நபி (ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது. (தல்கீஹ், இப்னு ஹிஷாம்)


ஆமினாவிற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய முதல் பெண் அபூலஹப் உடைய அடிமைப் பெண் ஸுவைபிய்யா ஆவார். (இத்ஹாஃபுல் வரா) அப்போது ஸுவைபிய்யாவுக்கு ‘மஸ்ரூஹ்’ எனும் ஆண் குழந்தை பிறந்திருந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு முன் ஹம்ஜா அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூ ஸலமா இப்னு அப்துல் அஸதுக்கும் அவர் பாலூட்டியுள்ளார். (ஸஹீஹுல் புகாரி)

ஸஅது கிளையாரிடம்

அக்காலத்தில் நகர்ப்புற அரபியர்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகக் கிராமப்புற செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு நகரத்திலுள்ள நோய் தொற்றிவிடாமலிருக்கவும், உடல் உறுதி பெற்று நரம்புகள் வலிமை அடையவும், தூய அரபி மொழியை திறம்படக் கற்றுக் கொள்ளவும் இந்த நடைமுறையைக் கையாண்டு வந்தனர். தனது பேரருக்குரிய செவிலித் தாயை அப்துல் முத்தலிப் தேடினார். இறுதியாக ஸஅத் இப்னு பக்ர் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹலீமா பின்த் அபூ துவைப் அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்’ என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார். அவரது கணவர் ஹாரிஸ் இப்னு அப்துல் உஜ்ஜா என்பவராவார். இவருக்கு ‘அபூ கபிஷா’ என்ற புனைப்பெயரும் உண்டு.

ஹாரிஸின் பிள்ளைகளான அப்துல்லாஹ், அனீஸா, ஷைமா என்ற புனைப் பெயர் கொண்ட ஹுதாபா, ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதர சகோதரிகள் ஆவர். இதில் ஷைமா என்பவர் நபி (ஸல்) அவர்களை தூக்கி வளர்த்தவர் ஆவார். நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான ஹாரிஸின் மகன் அபூ ஸுஃப்யானும் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதரர் ஆவார்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஜா அவர்களும் ஸஅத் குடும்பத்தாரிடம் பாலூட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தார். ஹம்ஜாவின் பால்குடி தாய் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டினார். இதனால் ஹம்ஜா அவர்களும் நபி (ஸல்) அவர்களும் ஸஅத் குடும்பத்தைச் சேர்ந்த செவிலித்தாய் மற்றும் ஸுவைபிய்யா ஆகிய இருவர் மூலம் பால் குடிச்சகோதரர்களாக இருந்தார்கள். (ஜாதுல் மஆது)

பால் குடிக்காலங்களில் ஹலீமா நபி (ஸல்) அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக் கண்டார். அதை அவரே சொல்லக் கேட்போம். “நான் எனது கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம். நான் எனது வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை. எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்கான விடிவையும் அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண் கழுதை மிகுந்த பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும் சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத் தவிர என்னுடன் வந்த அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது நான் எனது கணவரிடம் “அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அனாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்” என்று கூறியதற்கு அவர் “தாராளமாகச் செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்” என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான் அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன் எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன் சகோதரராகிய (எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை. எனது கணவர் எங்களது கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம். காலையில் எனது கணவர்: ‘ஹலீமாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்’ என்றார். அதற்கு நான் ‘அப்படித்தான் நானும் நம்புகிறேன்’ என்றேன்.

பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும் அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை என்னுடன் வந்த குழுவினர் அனைவரின் கழுதைகளையும் முந்திக் கொண்டு சென்றது. அப்பெண்கள் என்னை நோக்கி “அபூ துவைபின் மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களுடன் மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து வந்த கழுதைதானா இது?” என்றனர். “நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அதுதான் இது” என்றேன். அவர்கள் “நிச்சயமாக என்னவோ நேர்ந்துவிட்டது” என்றனர்.

எங்களது ஊருக்குத் திரும்பினோம். அல்லாஹ்வின் பூமியில் எங்களது பகுதியைப் போன்றதொரு வறண்ட பூமியை நான் கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து திரும்பும். அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப் பால் கூட கறக்க முடியாது. அவர்களது ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள் சமூகத்தில் அனைவரும் தங்களது இடையர்களிடம் ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும் பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்!’ என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப் போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.

இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள் வரை அல்லாஹ்விடமிருந்து பல நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய குழந்தைகளைவிட மிக உறுதியாகவும் வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது. அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம் அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம் ‘இந்த அருமைக் குழந்தை இன்னும் திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய் அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினேன். எனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே ஒப்படைத்து விட்டார்.” (இப்னு ஹிஷாம்)  
                                                                                                                                 தொடரும்.........
www.tamililquran.com

No comments:

Post a Comment